உள்ளூர் செய்திகள்
வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல்
போதை மறுவாழ்வு மைய உரிமையாளரான கார்த்தி, அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டை பகுதியில் இயங்கி வந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ராஜி என்ற வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போதை மறுவாழ்வு மையத்துக்கு அண்ணாசாலை போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் பாஸ்கர் ஆகியோர் நடத்திய விசாரணையில் மதுப்பழக்கத்தை விட வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்ட வாலிபர் ராஜி மீது சிகிச்சை என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதலே உயிரிழப்புக்கு காரணம் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அண்ணா சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போதை மறுவாழ்வு மையத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் அங்கு சிகிச்சை என்ற பெயரில் அடிஉதை கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற முறைகேடான சம்பவங்கள் காரணமாக போலீசார் போதை மறுவாழ்வு மையத்தை இழுத்து பூட்டி இருந்தனர்.
இந்த நிலையில் போதை மறுவாழ்வு மையத்தக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. போதை மறுவாழ்வு மைய உரிமையாளரான கார்த்தி, அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.