குழந்தை பராமரிப்பு
இரட்டையர்கள்

இரட்டையர்கள்... சுவாரசியமான உண்மைகள்....

Published On 2022-01-31 07:39 GMT   |   Update On 2022-01-31 07:39 GMT
30 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் கருப்பையில் இருந்து, கருத்தரிப்பு செயல்முறையின்போது ஒன்றுக்கும் மேற்பட்ட கரு முட்டைகள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கடந்த சில ஆண்டுகளாக இரட்டைக்குழந்தைகள் பிறக்கும் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கும் விஷயத்தில் மரபியல் காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் கருப்பையில் இருந்து, கருத்தரிப்பு செயல்முறையின்போது ஒன்றுக்கும் மேற்பட்ட கரு முட்டைகள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உயரம், உணவுமுறை போன்ற பிற காரணிகளும் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கும் விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உயரமான பெண்களுக்கு இன்சுலின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மேலும் இயல்பை விட சுமார் 5 மடங்கு அதிகமாக பால் உணவுகளை உட்கொள்ளும் தாய்மார்கள் சைவ உணவு உண்பவர்களை விட இரட்டை குழந்தைகளை கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது. இரட்டையர்கள் பற்றிய மேலும் பல சுவாரசியமான விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா?

* இரட்டையர்கள் என்பது ஒரே மாதிரியான உடல் அமைப்பு, அடையாளங்கள் கொண்ட குழந்தைகளை பெற்றெடுப்பதாகும். எனினும் கால் விரல் நகங்கள், நிறம், பிறப்பு அடையாளங்களில் சில வேறுபட்ட பண்புகளைக் கொண்டிருக்கலாம்.

* இரட்டையர்கள் ஒருவருக் கொருவர் நெருக்கமான பிணைப்பை கொண்டிருப்பார்கள். இருவருக்கும் இடையேயான பிணைப்பு கருப்பையிலேயே தொடங்கிவிடுகிறது. கர்ப்பத்தின் 14-வது வாரங்களில் இந்த பிணைப்பு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் மதிப்பிடுகிறார்கள். சில குழந்தைகளிடத்தில் இந்த பிணைப்பு 14 வாரங்களுக்கு முன்போ அல்லது பின்போ ஏற்படலாம்.

* ஒரே மாதிரியான இரட்டையர்களாக இருந்தால், ஒரு கரு முட்டை இரண்டு பகுதிகளாகப் பிரிந்து, அதன் பிறகு கருத் தரித்தல் நடைபெறும். ஆனால் கரு முட்டைகள் பிளவுபடும் நேரம்தான் இரட்டைக் குழந்தைகள் தனி தனி பனிக்குட பைகள் மற்றும் நஞ்சுக்கொடிகளை பெறுகிறார்களா அல்லது அவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்களா என்பதை தீர்மானிக்கிறது. தாயின் வயிற்றில் கரு முட்டைகள் பிளவுபடும் நேரத்தைப் பொறுத்து பல வேறுபாடுகள் ஏற்படலாம்.

* ஒரே மாதிரியான இரட்டையர்களாக இருந்தால், ஒரு குழந்தைக்கு மற்ற குழந்தையை விட அதிக ஊட்டச்சத்து கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். நஞ்சுக்கொடி இருவராலும் பகிர்ந்து கொள்ளப்படுவதாலும், ஒருவருக்கு மற்றவரை விட ரத்த அளவு அதிகமாக இருப்பதாலும் இது நிகழ்கிறது. இதனால் ஒரு குழந்தையின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகக்கூடும். ஊட்டச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும். அதிர்ஷ்டவசமாக இதற்கான சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கின்றன. அடிக்கடி அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் செய்வதன் மூலம் இத்தகைய பாதிப்பை கண்டறிந்து விடலாம்.

* ஒரே மாதிரியான இரட்டையர்கள் என்பவர்கள் ஒரே கரு முட்டையிலிருந்து உருவாகி, தங்கள் பெற்றோரிடம் இருந்து அதே மரபணுவை பெறுகிறார்கள். ஒரே மாதிரியான இரட்டையர்களைப் பற்றிய மற்றொரு சுவாரசியமான உண்மை என்னவென்றால், பெரும்பாலான நிகழ்வுகளில் அவர்களின் டி.என்.ஏ கிட்டத்தட்ட 99.9 சதவீதம் பொருந்தும். இது ஒரே மாதிரியான மூளை வடிவங்களுக்கு வழிவகுக்கும். இதனால் ஐ.கியூ உருவாக்கம், நுண்ணறிவு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் கைரேகைகள் மற்றும் பற்களின் அடையாளங்கள் வேறுபடலாம்.

* இரட்டைக் குழந்தைகள் பலர் இடது கை பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அது அவர்களின் தனித்துவமான அடையாளம். இரட்டைக் குழந்தைகளில் 22 சதவீதம் பேர் இடது கை பழக்கம் கொண்டவர்களாக பிறக்கிறார்கள். அதேசமயம் ஒற்றை குழந்தைகளில் 10 சதவீதம் பேரே இடது கை பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

* இரட்டையர்கள் ஒரே நாளில்தான் பிறந்திருக்க வேண்டும், அவர்களது பிறந்தநாள் ஒரே தேதியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. சில நாட்கள் அல்லது வார இடைவெளியில் இரண்டு வெவ்வேறு நாட்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். எனினும் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் நிலை அதிகரித்து வருவதால் சில நிமிட இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறக்கிறார்கள்.

* இரட்டைக் குழந்தைகளில் பெரும்பாலானோர் சிசேரியன் வழியே பிறந்தவர்கள் என்பதை அறிந்திருக்கலாம். இருப்பினும் இது அவசியமில்லை. கருப்பையில் இரு குழந்தைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்துள்ளதால், ‘ஏ’ குழந்தையின் தலை கீழ்நோக்கி இருந்தால் சுக பிரசவம் சாத்தியமாகும். அப்படி சுக பிரசவம் மூலம் ‘ஏ’ குழந்தை பிறந்தால் அடுத்ததாக ‘பி’ குழந்தை பிறப்பது கடினமாக இருக்காது. இருப்பினும் தாய் - சேயின் உடல் நலனை கருத்தில் கொண்டு சிசேரியன் பரிந்துரைக்கப்படுகிறது.

* இரட்டைக் குழந்தைகளின் எடை ஒற்றை குழந்தையின் எடையை விட குறைவாகவே இருக்கும். ஒற்றை குழந்தையின் சராசரி எடை 3.500 கிலோ கிராம். ஆனால் இரட்டை குழந்தை களின் எடை 2.500 கிலோ கிராம் என்ற அளவிலேயே இருக்கும். அதற்காக இரட்டைக் குழந்தைகள் ஆரோக்கியமில்லாமல் பிறக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் ஒற்றைக் குழந்தைகளைப் போலவே ஆரோக்கியமாக இருப்பார்கள்.

* பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரட்டையர்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், சில சமயங்களில் அவ்வாறு இருப்பதில்லை. அதாவது அவர்களின் முக அமைப்பு உள்ளிட்ட அடையாளங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரே கரு முட்டையில் இருந்து அல்லாமல் வெவ்வேறு கரு முட்டைகள் மூலம் கருவுறுதல் நிகழும்போது டி.ஏன்.ஏ. 75 சதவீதம் மட்டுமே பகிரப்படும். இது வளரும்போது அவர்களின் திறன்கள் மற்றும் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Tags:    

Similar News