மத்திய மந்திரிகளுடன் குஷ்பு சந்திப்பு- கட்சி பதவி வழங்கப்படுமா?
சென்னை:
பா.ஜனதாவில் சேர்ந்த நடிகை குஷ்பு கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள குஷ்பு கடந்த 2 நாட்களாக அங்கு முகாமிட்டுள்ளார்.
புதிதாக மந்திரிகளாக நியமிக்கப்பட்ட எல்.முருகன், கிஷன்ரெட்டி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறினார். மேலும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், ஸ்மிருதிஇரானி ஆகியோரையும் சந்தித்துள்ளார்.
இதுபற்றி குஷ்புவிடம் கேட்டபோது, மரியாதை நிமித்தமான சந்திப்புதான். மாநிலத் தலைவர் முருகன் தலைமையில்தான் கட்சிக்கு வந்தேன். அவருக்கு மந்திரி பதவி கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
மேலும் கிஷன்ரெட்டி எனக்கு தேர்தலில் பிரசாரம் செய்து பணியாற்றியவர். அவருக்கும் மந்திரி பதவி கிடைத்துள்ளது. எனவே மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து சொல்லவே டெல்லி சென்றேன். வேறு எந்த விசேஷமும் இல்லை என்றார்.
ஆனால் அவர் டெல்லியிலேயே முகாமிட்டு இருப்பதால் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.