ஆன்மிகம்
ஆலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பனிமயமாதா அன்னையின் சப்பரம்

ஆலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பனிமயமாதா அன்னையின் சப்பரம்

Published On 2021-08-06 03:42 GMT   |   Update On 2021-08-06 03:42 GMT
ஆலய திருவிழாவையொட்டி, பக்தர்கள் அதிகளவில் வரக்கூடும் என்பதால், பேராலயத்துக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில், அனைத்து சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தூய பனிமய மாதா பேராலய 439-வது பெருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக, தொடர்ந்து 2-வது ஆண்டாகவும் பக்தர்கள் பங்கேற்பின்றி விழா எளிமையாக நடைபெற்றது.

விழாவின் சிகர நாளான நேற்று பனிமயமாதா அன்னையின் பெருவிழா கொண்டாடப்பட்டது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியுப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவற்றை பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்தே கண்டு வழிபட்டனர்.

வழக்கமாக 10-ம் திருவிழா இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்திலும், 11-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளிலும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறும். ஆனால், 2-வது ஆண்டாக, இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக சப்பர பவனி ரத்து செய்யப்பட்டது. அன்னையின் சப்பரம் அலங்கரிக்கப்பட்டு பேராலயத்தின் உள்ளேயே வைக்கப்பட்டு இருந்தது.

ஆலய திருவிழாவையொட்டி, பக்தர்கள் அதிகளவில் வரக்கூடும் என்பதால், பேராலயத்துக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில், அனைத்து சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில், சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News