செய்திகள்
கோப்புப்படம்

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 16 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Published On 2020-09-27 20:46 GMT   |   Update On 2020-09-27 20:46 GMT
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 16 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீஜிங்:

கனிம வளங்கள் நிறைந்த சீனாவில் ஏராளமான நிலக்கரி மற்றும் தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில சுரங்கங்கள் மட்டுமே உரிய அனுமதி பெற்றும் முறையான பாதுகாப்பு அம்சங்களுடனும் செயல்படுகின்றன.

பல சுரங்கங்கள் அனுமதி இல்லாமலும் பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமில்லாத ஆபத்தான சூழலிலும் இயங்குகின்றன. இதனால் சீனாவில் அடிக்கடி சுரங்க விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர்.

உலகிலேயே சீனாவில் தான் மிகவும் மோசமான மற்றும் அதிக அளவிலான சுரங்க விபத்துகள் ஏற்படுவதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் சீன அரசு இதில் கவனம் செலுத்தாததால் சுரங்க விபத்துகள் தொடர்ந்து வருகின்றன.

இந்தநிலையில் சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குய்சோ மாகாணம் கிஜியாங் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது.இங்கு நேற்று காலை வழக்கம்போல் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தன.

30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரங்கத்துக்குள் கார்பன் மோனாக்சைடு வாயு அளவுக்கு அதிகமாக வெளியேறியது.

இதனை சுவாசித்த சுரங்கத் தொழிலாளர்கள் கடும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். சில வினாடிகளில் தொழிலாளர்கள் ஒவ்வொருவராக சுருண்டு விழ தொடங்கினர். எனினும் சில தொழிலாளர்கள் விரைந்து செயல்பட்டு சுரங்கத்தை விட்டு வெளியேறினர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் உயிர்காக்கும் கருவிகளுடன் சென்று சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் விஷவாயு தாக்கி 16 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். அதே சமயம் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயங்கிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுரங்கத்துக்குள் விஷவாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி விரிவான விசாரணை நடத்த உத்தர விட்டுள்ளதாக குய்சோ மாகாண அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News