ஆன்மிகம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி

Published On 2021-11-22 08:50 GMT   |   Update On 2021-11-22 08:50 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா அடுத்த மாதம் டிசம்பர் 11-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி தேரோட்டமும், 20-ந்தேதி ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி, மாசி, சித்திரை, ஆவணி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெரும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் டிசம்பர் 11-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி 19-ந் தேதி தேரோட்டமும் அன்று நள்ளிரவு சப்தாவர்ண நிகழ்ச்சியும், 20-ந் தேதி மார்கழி திருவாதிரையையொட்டி ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.

திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, மெல்லிசை கச்சேரி, பட்டிமன்றம் பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த திருவிழாவிற்கான கால்நாட்டு விழா நேற்று காலை 8.45 மணிக்கு மேல் தாணுமாலயசாமி சன்னதி அருகே உள்ள முருகன் சன்னதி எதிரே கால் நாட்டு வைபவம் நடந்தது. அதனை தொடர்ந்து மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முன்பு பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் வட்ட பள்ளிமடம் ஸ்தானிகர் பரமேஸ்வரன் சர்மா, தெற்கு மண் மடம் நித்ய காரிய யோகஸ்தானிகர் ஆதிசேஷன் நம்பூதிரி மற்றும் திலீபன் நம்பூதிரி, கோவில் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்க நிர்வாகிகள், மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகமும், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை நாடக சங்க நிர்வாகத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News