செய்திகள்
ஜே.சி.பி. எந்திரம் மோதி சோபா தயாரிப்பாளர் பலி
தர்மபுரியில் மோட்டார் சைக்கிள் மீது ஜே.சி.பி. எந்திரம் மோதிய விபத்தில் சோபா தயாரிப்பாளர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தருமபுரி:
தருமபுரி குப்பூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது39). சோபா தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு 1 மகளும், 1 மகனும் உள்ளனர். நேற்று மோட்டார் சைக்கிளில் கந்தசாமி குப்பூருக்கு சென்று கொண்டிருந்த போது வளைவு பகுதியில் திரும்பினார். அப்போது அந்த வழியாக வந்த ஜே.சி.பி. எந்திரம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான கந்தசாமியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.