செய்திகள்
தண்டனை விதிக்கப்பட்ட நாகூர் மீரானை போலீசார் ஜெயிலுக்கு அழைத்து சென்ற காட்சி.

பேராசிரியையை கத்தியால் குத்தி நகை பறித்த காவலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்

Published On 2021-04-08 15:49 GMT   |   Update On 2021-04-08 15:49 GMT
ராணிப்பேட்டை சிப்காட் அருகே வாடகைக்கு வீடு பார்ப்பது போல் கல்லூரி பேராசிரியையை கத்தியால் குத்தி நகை பறித்த வழக்கில் காவலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
வேலூர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 54), அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியை. இவர்கள் வசித்த வந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒருபகுதி காலியாக இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி கீழ்விஷாரத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நாகூர் மீரான் (36) வாடகைக்கு வீடு கேட்டு சென்றுள்ளார்.

அப்போது வீட்டை சுற்றி பார்த்த அவர் சில நாட்களுக்கு பின்னர் குடும்பத்துடன் வருவதாக கூறி உள்ளார். அதன்பின்னர் 4 நாட்கள் கழித்து 10-ந் தேதி நாகூர் மீரான் மட்டும் மீண்டும் அந்த வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் புவனேஸ்வரி தனியாக இருப்பதை அறிந்த அவர் புவனேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கழற்றி தரும்படி கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.

ஆனால் அவர் நகைகளை கழற்றி கொடுக்க மறுத்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த நாகூர் மீரான் கத்தியால் புவனேஸ்வரி வயிற்றில் குத்தினார். அவர் வலியால் அலறி துடித்தபோது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகைகளை பறித்து சென்றுவிட்டார். இதில், படுகாயம் அடைந்த புவனேஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து சிப்காட் போலீஸ் நிலையத்தில் புவனேஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து நாகூர் மீரானை கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தார். இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் லட்சுமிபிரியா ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி பாலசுப்பிரமணியன் தீர்ப்பு அளித்தார்.

அதில், அத்துமீறி வீடுபுகுந்து கல்லூரி பேராசிரியையை கத்தியால் குத்தி படுகாயம் ஏற்படுத்தியதற்காகவும், அவரின் நகையை பறித்து சென்றதற்காகவும் தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் வித்தார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நாகூர் மீரானை, போலீசார் வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News