செய்திகள்
திருவண்ணாமலையில் டி.டி.வி. தினகரன் மகள் திருமணம் நடந்த காட்சி.

திருவண்ணாமலையில் பிரம்மாண்டமாக நடந்த டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் - நேரில் வந்து வாழ்த்திய சசிகலா

Published On 2021-09-16 08:30 GMT   |   Update On 2021-09-16 09:47 GMT
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் தனியார் திருமண மண்டபத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் மகள் திருமணம் இன்று நடைபெற்றது.
திருவண்ணாமலை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் -அனுராதா ஆகியோரின் மகள் ஜெயஹரணிக்கும், தஞ்சாவூர் கிருஷ்ணசாமி வாண்டையார் -ராஜேஸ்வரி அம்மாள் மகன் ராமநாதன் துளசி ஐயா வாண்டையாருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் சசிகலா, மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஓம் சக்தி நகர் பராசக்தி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் அருகில் கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. மாப்பிள்ளை அழைப்பின்போது வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த திருமண நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இன்று காலை திருமண மண்டபத்தில் ஜெயஹரணி - ராமநாதன் துளசி ஐயா வாண்டையார் திருமணம் நடைபெற்றது.



திருமண நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உறவினர்கள் மற்றும்  அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மணமக்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.


Tags:    

Similar News