நெல்லை அருகே தொழிலாளி கொலையில் 6 வாலிபர்கள் கைது
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழசெவல் நயினார் குளத்தை சேர்ந்தவர் சங்கரசுப்பிரமணியன் (வயது 38), தோட்ட தொழிலாளி.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் முன்னீர்பள்ளம்- வடுவூர்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் அவரை தலை துண்டித்து கொலை செய்தது. பின்னர் தலையை 2014-ல் கொலை செய்யப்பட்ட மந்திரம் என்பவரது கல்லறையில் வைத்து சென்று விட்டது.
இதனால் பழிக்குப் பழியாக சங்கரசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இதுதொடர்பாக ஏற்கனவே கொலை செய்யப்பட்ட கொத்தன்குளத்தை சேர்ந்த மந்திரம் என்பவரது மகன் மகாராஜா (20), கண்ணன் மகன் சீயான் பாண்டி (31), டவுன் பாறையடியை சேர்ந்த சீதாராமகிருஷ்ணன் என்ற பப்பி (24), கொத்தன்குளத்தை சேர்ந்த கணபதி மகன் பிரபாகரன் (26), ரத்தினசாமி மகன் அரவிந்த் மற்றும் தினேஷ் என்ற சீயான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட மந்திரம் கொலைக்கு பழிக்குப்பழியாக அவரது மகன் மகாராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த கொலையை செய்திருப்பது உறுதியானது. இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.