தொழில்நுட்பம்
59 சீன செயலிகளை உடனடியாக முடக்க டெலிகாம் மற்றும் இணைய நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
இந்தியாவில் தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகளை உடனடியாக முடக்க டெலிகாம் மற்றும் இணைய நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகளை உடனடியாக முடக்க டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டெலிகாம் ஆப்பரேட்டர்கள் உடனடியாக தடை செய்யப்பட்ட செயலிகள் மற்றும் அவற்றின் வலைதளங்களை முடக்க உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும் நிறுவனங்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என டிராய் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக மத்திய அரசு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன சார்ந்து இந்தியாவில் இயங்கி வந்த 59 செயலிகளுக்கு தடை விதித்தது. இதில் டிக்டாக், யுசி நியூஸ், டென்சென்ட் நிறுவனத்தின் வீசாட் என பல்வேறு பிரபல செயலிகள் இடம்பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர தடை உத்தரவு வெளியான 24 மணி நேரத்திற்குள் டிக்டாக் இந்தியா நிறுவனம், 'மத்திய அரசு பிறப்பிக்கும் டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதாக தெரிவித்தது. மேலும் இந்திய பயனர் விவரங்களை வேறு எந்த அரசாங்கத்துடனும் பகிர்ந்து கொள்ளவில்லை' என தெரிவித்தது.