வடமதுரை அருகே ரத்தக்கறையுடன் கிணற்றில் கிடந்த சாக்கு மூட்டை
வடமதுரை:
வடமதுரை அருகே மேட்டுப்பட்டியில் இருந்து புத்தூர் செல்லும் சாலையில் கொல்லப்பட்டியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் 60 அடி ஆழமுள்ள வறண்ட கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே இன்று காலை ஆடு மேய்க்கும் சிறுவர்கள் சென்ற போது துர்நாற்றம் வீசியது. கிணற்றில் எட்டி பார்த்தபோது ரத்தக்கறையுடன் ஒரு சாக்குமூட்டை கிடந்தது.
உடனே அதிர்ச்சியடைந்த அவர்கள் கந்தசாமியிடம் தெரிவித்தனர். மேலும் வடமதுரை போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து கிணற்றில் கிடந்த சாக்கு மூட்டையை மேலே கொண்டு வந்தனர்.
அந்த மூட்டையில் செம்மறி ஆடு இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.
யாரோ மர்ம நபர்கள் அதனை இங்கே வீசிச் சென்றுள்ளனர். கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் அதில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அந்த மூட்டையை பெட்ரோல் ஊற்றி அழித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.