செய்திகள்
கோப்புபடம்

மனைவியிடம் செல்போனில் பேசி விட்டு விசைத்தறி அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-09-14 08:57 GMT   |   Update On 2020-09-14 08:57 GMT
பல்லடம் அருகே குடும்பத் தகராறில் பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவிடம் செல்போனில் பேசிவிட்டு விசைத்தறி அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது45). இவர் சொந்தமாக விசைத்தறி கூடம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மலர்செல்வி (39) என்ற மனைவியும், நவீன் குமார் (16), என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த மலர் செல்வி நேற்று காலை தனது மகனுடன் பல்லடம் அருகே கள்ளிப் பாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் காலை 9 மணி அளவில் மலர்செல்வியின் போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய வேலுச்சாமி, “இனிமேல் இதுபோல சண்டைகள் வராது. நீ திரும்ப வீட்டுக்கு வர வேண்டும்“‘ என கூறியுள்ளார். வேலுச்சாமி பேசிக்கொண்டிருக்கும்போதே சார்ஜ் இல்லாததால் மலர் செல்வியின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது. இதையடுத்து மலர்செல்வி தனது செல்போனை சார்ஜ் போட்டு, கணவரின் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் எடுக்கவில்லை. இதுகுறித்து மகன் நவீன் குமாரிடம் சொல்லி வீட்டுக்கு போய் பார் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, கள்ளிப் பாளையத்தில் இருந்து, சின்னிய கவுண்டம்பாளையத்தில் உள்ள தங்களது வீட்டுக்கு நவீன்குமார் வந்தார். வீட்டிற்குள் வந்து பார்த்தபோது வேலுச்சாமி அங்கு இல்லை. அப்பா அப்பா என்று அழைத்தபடி, அருகில் உள்ள பழைய சாமான்கள் போடும் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது அங்குள்ள மேற்கூரை இரும்பு கம்பியில் நைலான் கயிற்றில் தூக்கில் வேலுச்சாமி தொங்கிக்கொண்டிருந்தார். இதை கண்டு நவீன் குமார் அலறித்துடித்தார்.

பின்னர் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, வேலுச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேலுச்சாமி மனைவி மலர்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசைத்தறி அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News