செய்திகள்
சபரிமலைக்கு வர ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்பது சாத்தியமற்றது - தேவசம் போர்டு
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை சாத்தியமற்றது என தேவசம் போர்டு தலைவர் கூறியுள்ளார். #Sabarimala
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பம்பா உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சேதத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, நவம்பர் மாதம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கவும் கேரள காவல்துறை மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.
நாளொன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சபரிமலை கோயிலுக்கு அனுமதிக்கக் கோரியும், காவல் துறையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிமுகப்படுத்தி இருக்கும் "விர்ச்சுவல் கியூ" மூலமாகப் பக்தர்களின் பதிவைக் கணக்கிடவும் காவல்துறை வலியுறுத்தியது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திருவாங்கூர் தேவஸ்தானத்தின் தலைவர் பத்மகுமார், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சபரிமலையில், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உண்டாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஆன்லைன் தரிசன பதிவு முறை குறித்து பல்வேறு புகார்கள் வருவதால், அந்த முறை நீக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கமான முறையிலேயே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
திருப்பதியை போல சபரிமலையிலும் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மகரவிளக்கு சமயங்களில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு வருகின்றனர். இதனை, 40 ஆயிரமாக எப்படி குறைக்க முடியும் என பத்மகுமார் கூறினார்.
வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பம்பை - திருவேணி பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.