கதம்பம்
பணம்

சிகிச்சைக்கு கட்டணம் கிடையாது

Published On 2022-01-10 10:12 GMT   |   Update On 2022-01-10 10:12 GMT
மருத்துவர் வேலை செய்யும் போதுதானே படி கொடுக்கனும்? இதென்ன அவர் சும்மா இருக்கும் போது படி அளப்பதும், நோயாளிக்கு வைத்தியம் பார்க்கும் போது படிய நிறுத்தி வைக்கிறதும்..?!
ஒரு சீனப்பழங்கதை. நவீனம் புகாத, பண்டமாற்று முறை புழக்கத்தில் இருந்த காலம் அது.

நம்ம ஊருல இருக்கிறதுபோல அங்கயும் ஊருக்கு ஒரு மருத்துவச்சி வைத்தியர் இருந்திட்டு வந்தாங்க.

அவங்க மருத்துவ சேவைக்காக ஊர் மக்கள் முறை வைத்து தினமும் படி அனுப்பிருவாங்க. இந்தப்படி தினமும் மருத்துவர் வீட்டுக்கு சன்மானமா போகும்.

தினமும் சன்மானம்னா, தினமும் வைத்தியம் பாக்கிறாரா? ரொம்ப கைராசி வைத்தியர்தான் போலனு தப்புக்கணக்கு போடாதீங்க.

இந்தப்படி எப்பவேணாலும் ஒருநாள் திடீர்னு நிறுத்தப்படும். எப்போ தெரியுமா?

எப்போ அந்தக்கிராமத்துல ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் குன்றி நோய்வாய்ப்படுறாரோ அன்னைக்கு மருத்துவருக்கு படி நிறுத்தப்படும்.

அப்புறம்...?

அப்புறம் என்ன.. வைத்தியர் எவ்வளவு தீவிரமா அந்த நோயுற்றவரை ஆரோக்கியமடைய செய்றாரோ அன்னையில இருந்து தான் மீண்டும் படி மருத்துவர் வீடு வந்து சேரும்.

மருத்துவர் வேலை செய்யும் போதுதானே படி கொடுக்கனும்? இதென்ன அவர் சும்மா இருக்கும் போது படி அளப்பதும், நோயாளிக்கு வைத்தியம் பார்க்கும் போது படிய நிறுத்தி வைக்கிறதும்..?!

என்னடா இது புதுசா இருக்கா?

இல்லை. இது ரொம்ப பழைய பழக்கம். சீனாவுல உண்மையாவே இருந்ததாம்! அதாவது, மருத்துவரோட உண்மையான வேலைக்கு சன்மானம் தருவாங்க. அங்க அவருடைய  வேலை, நோய் வந்த பின்னால வைத்தியம் பாக்கிறது இல்லை.

பின்ன?!

அந்தக்கிராமத்தில யாருக்கும் எந்த நோயும் வராம கிராம மக்கள் அனைவரும் ஆரோக்கியமா இருக்க வைக்கிறது தான் அவருடைய வேலையா பாக்கப்பட்டிச்சு. அதனால எப்போ ஒருவர் நோயுறுகிறாரோ அப்போ மருத்துவருக்கு சன்மானம் ரத்து.
 
எப்பேற்பட்ட புரிதல் இது!

- டாக்டர் பிரேமா
Tags:    

Similar News

நாத்தனார்
அருமருந்து