செய்திகள்
தொடர் மழை காரணமாக கடற்கரை சாலை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி இருந்தது

தொடர் மழை எதிரொலி- சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

Published On 2021-11-29 03:00 GMT   |   Update On 2021-11-29 03:00 GMT
புதுவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. சண்டே மார்க்கெட் வியாபாரமும் பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:

புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்துவரும் நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அவ்வப்போது கனமழை கொட்டி வருகிறது. மேலும் புதுவைக்கு தொடர் மழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

வழக்கமாக வார விடுமுறை நாட்களில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால் ஓட்டல்கள், சுற்றுலா தலங்கள் களை கட்டும்.

இந்தநிலையில் தொடர் மழை காரணமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வாரம் குறைந்திருந்தது.

இதன் காரணமாக புதுவை நகரப்பகுதி பெரிய அளவில் சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி காணப்பட்டது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகளும் பரபரப்பின்றி வெறிச்சோடி கிடந்தன. தொடர் மழையால் நேற்று தாவரவியல் பூங்கா திறக்கப்படவில்லை. எனவே அங்கு வந்த பொதுமக்கள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பாரதி பூங்கா திறந்து இருந்தது. அங்கு சிலர் மட்டும் வந்து நடைபயிற்சி மேற்கொண்டனர்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படும் சண்டே மார்க்கெட்டில் நேற்று உள்ளூர் வியாபாரிகள் மட்டும் கடைகள் போட்டிருந்தனர். பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. நேற்று முழுவதும் தொடர் மழை பெய்ததால் பொதுமக்கள் வரவில்லை. இதனால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:    

Similar News