உள்ளூர் செய்திகள்
அத்தி மரங்களை பார்வையிடும் அதிகாரிகள்.

அத்தி பயிரிட தோட்டக்கலை மானியம்

Published On 2022-04-15 09:36 GMT   |   Update On 2022-04-15 09:36 GMT
சேலம் மாவட்டத்தில் அத்தி சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறை மூலம் மானியமும் வழங்கப்படுகிறது.
சேலம்:

அத்திமரம் பைகஸ் கேரிகா என்றழைக்கப்படும் பலா, ஆலமரம், அரசமரம், மல்பெரி வகை சார்ந்த மோரேசியே குடும்பத்தை சார்ந்தது. துருக்கி முதல் வட இந்தியா வரை பரவி பூர்வீகமாகக் கொண்டது துருக்கி, எகிப்து மற்றும் இந்தியாவில் அதிகமாக பயிரிடப்படுகிறது.

வறண்ட காலநிலை மற்றும் மிதமான குளிர் பிரதேசங்களிலும் வளரும் தன்மை கொண்டது. மிதமான குளிர் பிரதேசங்களில் டிம்லா கத்தியும், வறண்ட நிலங்களில் பூனா, சிகப்பு ஆப்கான், சிகப்பு டர்க்கி, புரவுன் மற்றும் டயானா ரகங்கள் அதிகமாக பயிரிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீர் தேங்காத அனைத்து மண் வகைகளிலும் வளரும் தன்மை கொண்டது. உப்புத்தன்மை குளோரைடு உப்பு சல்பேட் உப்பையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது.

அத்திப் பழத்தைப் பறித்து பழமாகவும், உலர்த்தியும் தேனில் பதப்படுத்தியும் பயன்படுத்தலாம். அத்தி பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் இரும்பு சத்து ஈஸ்ட்ரோஜன் சத்துக்கள் உள்ளதால் வயது மூப்பு தொடர்பான செயல்பாடுகளை கட்டுப்-படுத்தவும் உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. ரத்தத்தில் ட்ரைகிளிரைடு அளவை குறைக்க உதவுகிறது. நீரிழிவு மற்றும் புற்று நோய் பாதிப்புகளை குறைக்கிறது.

அத்திப்பழம் குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது. இதில் இருக்கும் மெக்னீசியம், துத்தநாகம், மேங்கனீசு கருவுருதலுக்கு முக்கிய பங்களிக்கின்றன.

சிறுநீரக கற்களை குறைக்க அத்திப்பழங்களை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறியவுடன் குடித்து வரலாம்.

 சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, அயோத்தியாபட்டணம், வாழப்பாடி, வீரபாண்டி மற்றும் கொளத்தூர் வட்டாரங்களில் பரவலாக அத்தி பயிரிடப்படுகிறது. இதனை ஊக்கப்படுத்தும் விதமாக தோட்டக்-கலைத்-துறையின் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் மானியமும் வழங்கப்படுவதாக பனமரத்துப்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல் கூறியுள்ளார்.

இயற்கை சாகுபடி முறைகள் இப்பயிருக்கு மிகவும் ஏற்றது.  உள்ளூர் சந்தைகள் மற்றும் வெளியூர் சந்தைகளில் அத்திபழத்தின் தேவை அதிகம் உள்ளதால் விவசாயிகள் நல்ல விலை பெற்று வருகின்றனர். 
Tags:    

Similar News