ராமேசுவரத்தில் இன்று அதிகாலை இடி-மின்னலுடன் கனமழை
ராமேசுவரம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ராமேசுவரத்தில் பலத்த இடி சத்தம் கேட்டது. அப்போது மின்னலும் வெட்டியது. தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழை கனமழையாக மாறி சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
மழை காரணமாக ராமேசுவரத்தில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மழைநீரில் நீந்தியபடியே சென்றன. இதனால் ராமேசுவரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.