செய்திகள்

மாறுபட்ட கருத்து இருக்கக் கூடாது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது - கமல் ஹாசன்

Published On 2018-09-19 10:10 GMT   |   Update On 2018-09-19 10:10 GMT
மாறுபட்ட கருத்து இருக்கக்கூடாது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். #Kamal #MakkalNeedhiMaiam
கோயம்புத்தூர்:

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், சமீபத்தில் கட்சியின் உள்கட்டமைப்பை மாற்றியமைத்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். அதன்பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

இதற்கிடையே, இன்றும் நாளையும் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.  இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்ற அவர், பாராளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது என்றார்.

இந்நிலையில், கோவையில் நடைபெற்ற பயிலரங்கத்தில் கமல் ஹாசன் கலந்து கொண்டார். பயிலரங்கம் முடிந்து விமான நிலையத்துக்கு வந்த கமல் ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



மக்கள் நீதி மையம் பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பல வல்லுனர்கள் கலந்து கொண்டு வழிகாட்டினர். இதில் பங்கேற்றவர்கள் மீண்டும் இதுபோன்ற பயிலரங்கம் நடத்த வேண்டும் என்றனர்.

அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்பது அவர்களின் ஜனநாயக உரிமை. கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். விமர்சனத்திற்கு தாக்குதல் தான் பதில் என்பது அரசியல் மாண்பல்ல. மாறுபட்ட கருத்து இருக்கக்கூடாது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடைத்தேர்தலில் போட்டியில்லை என்பதால் அதை உன்னிப்பாக கவனிப்போம்.  நல்ல மாற்றத்திற்கு பெரிய வீச்சு தேவை. யாராக இருந்தாலும் நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #Kamal #MakkalNeedhiMaiam
Tags:    

Similar News