செய்திகள்
சாலை ஓரங்களில் குப்பையை எரிப்பதால் பொதுமக்கள் அவதி
ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பையை எரிப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
மதுரையிலிருந்து ராஜபாளையம், தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தான் செல்கின்றனர். அதேபோல அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்களும் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.
ஆதலால் இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். இந்த நிலையில் இந்த சாலையில் பல்வேறு பகுதிகளில் குப்பைகளை தேக்கிவைத்து எரிக்கின்றனர்.
இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் புகை மண்டலத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளதால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
எனவே சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், அவ்வாறு கொட்டுபவர்கள் மீதும், எரிப்பவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.