செய்திகள்
2½ கோடி தடுப்பூசி போட மோடி பிறந்தநாள் வரை காத்திருந்தது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி
18 வயதுக்கு மேற்பட்டோரில் மூன்றில் ஒரு பங்கு பேர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடவில்லை என்று ப.சிதம்பரம் கேள்வி விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, நேற்று முன்தினம் நாடு முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதனால், அன்று ஒரே நாளில் 2½ கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தப்பட்டது.
மொத்த தடுப்பூசி எண்ணிக்கையில் ஐரோப்பாவை இந்தியா மிஞ்சி விட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியா புதிய மைல்கல் சாதனை படைத்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய அலுவலகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில், “2½ கோடி தடுப்பூசி போடப்படும் நாட்கள் நிறைய வர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதுதான் நாட்டுக்கு தேவை“ என்று கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரமும் விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
17-ந் தேதி 2½ கோடி தடுப்பூசி போடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இதற்காக ஏன் மோடி பிறந்தநாள்வரை காத்திருக்க வேண்டும்? ஒருவேளை, மோடி பிறந்தநாள் டிசம்பர் 31-ந் தேதி என்றால், ஆண்டின் கடைசி நாளில்தான் 2½ கோடி தடுப்பூசி போடுவார்களா?
தடுப்பூசி போடுவது என்பது பிறந்தநாளுக்கு ‘கேக்‘ வெட்டுவது போன்றது அல்ல. தடுப்பூசி போடுவது ஒரு திட்டம். ஒரு தொடர் நடவடிக்கை. அதை பிறந்தநாளில் மட்டுமின்றி, தினந்தோறும் விரைவுபடுத்த வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்டோரில் மூன்றில் ஒரு பங்கு பேர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடவில்லை. 21 சதவீதம்பேர் மட்டுமே 2 டோஸ் போட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...பிரதமர் மோடி பெற்ற பரிசுகள், நினைவுப் பொருட்கள் ஏலம்