செய்திகள்
ஆப்கானிஸ்தான் சிறப்பு படைகள் தேடுதல் வேட்டை

ஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் தாக்குதலில் 35 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

Published On 2019-09-15 14:28 GMT   |   Update On 2019-09-15 14:28 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஃபரா மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 35 பேர் கொல்லப்பட்டனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். இந்த படைகளுக்கு ஆதரவாக அரசுக்கு விசுவாசமான தன்னார்வலர்கள் படையும் இணைந்துள்ளது.



இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் ஈரான் நாட்டை ஒட்டியுள்ள ஃபரா மாகாணத்துக்குட்பட்ட அனார் டாரா மாவட்டத்தில் தலிபான்கள் நிழல் அரசங்காத்தை நடத்தி வந்தனர்.

அங்கிருக்கும் தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவம் மற்றும் விமானப்படையினர் நேற்றிரவு  நடத்திய தாக்குதலில் 35-க்கும் அதிகமான தலிபான்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் அந்த மாவட்டத்தின் தலிபான் தலைவர் சய்யத் அஸிம் மற்றும் உளவுத்துறை தலைவர் எஸ்மத்துல்லா ஆகியோர் முக்கியமானவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags:    

Similar News