செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் வ.உ.சிதம்பரனார், சுப்பராயன், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் படங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்

Published On 2021-02-23 12:47 GMT   |   Update On 2021-02-23 12:47 GMT
தமிழக சட்டசபை மண்டபத்தில் வ.உ.சிதம்பரனார், பி.சுப்பராயன், முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவ படங்கள் இன்று புதிதாக திறக்கப்பட்டன.
சென்னை:

தமிழக சட்டசபை மண்டபத்தில் ஏற்கனவே திருவள்ளுவர், பெரியார், காமராஜர் மற்றும் முன்னாள் முதல்- அமைச்சர்கள் உள்ளிட்ட 12 தலைவர்கள் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மேலும் 3 தலைவர்களின் படங்கள் சட்டசபையில் வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி வ.உ.சிதம்பரனார், பி.சுப்பராயன், முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவ படங்கள் இன்று புதிதாக திறக்கப்பட்டன.

வ.உ.சிதம்பரனார், பி.சுப்பராயன் ஆகியோர் நின்ற நிலையிலும், ராமசாமி ரெட்டியார் இருக்கையில் அமர்ந்த நிலையிலும் உள்ள படங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த 3 படங்களும் சட்டசபை மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த படங்களின் திறப்பு விழா இன்று மாலை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 தலைவர்களின் படங்களை திறந்து வைத்தார். விழாவில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

புதிதாக திறக்கப்பட்ட 3 படங்களையும் சேர்த்து தமிழக சட்டசபையில் வைக்கப்பட்ட தலைவர்களின் படங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
Tags:    

Similar News