தொழில்நுட்பம்
144 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்
சியோமி நிறுவனம் 144 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி பல்வேறு புதிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவற்றில் புதிய ஸ்மார்ட்போன்கள், அக்சஸரீக்கள், ஃபிட்னஸ் பேண்ட் உள்ளிட்டவை சியோமி, ரெட்மி மற்றும் எம்ஐ பிராண்டிங்கில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு சாதனங்களின் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. இதுதவிர ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சாதனங்களின் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது. எதுவாயினும், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
அந்த வரிசையில் சியோமி உருவாக்கி வரும் புதிய சாதனம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. மர்மமாக உருவாகி வரும் சியமி சாதனம் ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் 144 எம்.பி. பிரைமரி கேமரா என தகவல் வெளியாகி இருக்கிறது.
சியோமி நிறுவனம் விரைவில் எம்.ஐ.10எஸ் ப்ரோ அல்லது எம்.ஐ. சிசி9 ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 144 எம்.பி. சியோமி ஸ்மார்ட்போன் 108 எம்.பி. சென்சார் கொண்டிருக்கும் தற்போதைய சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் சியோமி எம்.ஐ. நோட் 10 சீரிஸ், எம்.ஐ. 10 5ஜி, எம்.ஐ. ஆல்ஃபா, எம்.ஐ. சிசி9 ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் 108 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. புதிய 144 எம்.பி. சென்சார் உருவாக்க சியோமி நிறுவனம் சாம்சங்குடன் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. மேலும் இதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர் மற்றும் இதர கேமரா சென்சார் பற்றிய விவரங்களும் ரகசியமாகவே இருக்கிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.