செய்திகள்
சென்னை ஐகோர்ட்

ஜூன் 11-ந்தேதி வரை அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்: ஐகோர்ட்டு அறிவிப்பு

Published On 2021-05-29 01:51 GMT   |   Update On 2021-05-29 01:51 GMT
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், ஜூன் 11-ந் தேதி வரை அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா பரவல் 2-வது அலையில் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் இறந்துள்ளனர். கீழ்கோர்ட்டு நீதிபதிகள், ஊழியர்கள், ஐகோர்ட்டு ஊழியர்களும் பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை கருத்தில்கொண்டு, கோர்ட்டுகளில் காணொலி காட்சி வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இந்த நிலையில், மே மாத கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதம் முதல் வழக்கம்போல அனைத்து கோர்ட்டுகளும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பாலும், தமிழகத்தில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளதாலும், ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஜூன் மாதம் 11-ந் தேதி வரை அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று ஐகோர்ட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐகோர்ட்டு நீதித்துறை பதிவாளர் எம்.என்.செந்தில்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜூன் 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை மிக அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிசன் பெஞ்ச் ஜூன் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் வழக்குகளை விசாரிக்கும்.

ஜூன் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் ரிட் வழக்குகளையும், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்கும்.

இவர்கள் தவிர, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆர்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் முறையே ரிட் வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரிப்பார்கள்.

இதேபோல ஜூன் 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி. தமிழ்ச்செல்வி ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச், நீதிபதிகள் வி.பார்த்திபன், எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.

ஜூன் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நீதிபதிகள் டி.ராஜா, வி.சிவஞானம் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச், நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.ஹேமலதா ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அப்துல்குத்தூஸ், ஜி.கே.இளந்திரையன் ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.

அதேபோல மதுரை கிளையைப் பொறுத்தவரை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஆர்.தாரணி ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச், நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், ஏ.ஏ.நக்கீரன், பி.டி.ஆதிகேசவலு, ஜி.ஆர்.சுவாமிநாதன், சந்திரசேகரன் ஆகியோர் மூன்று பிரிவுகளாக வழக்குகளை விசாரிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் மனுக்களைப் பொறுத்தவரை, ஏற்கனவே மனு தள்ளுபடி ஆகியிருந்தால் அதே நீதிபதி முன்புதான் மீண்டும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜாமீன் ரத்து கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களும் ஏற்கனவே ஜாமீன் வழங்கிய நீதிபதி முன்பாகத்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News