செய்திகள்
பாஜக

பீகாரை தொடர்ந்து மேற்கு வங்காளத்தை கைப்பற்ற பா.ஜனதா அதிரடி வியூகம்

Published On 2020-11-18 08:35 GMT   |   Update On 2020-11-18 08:35 GMT
பீகார் சட்டசபை தேர்தலில் கடும் போட்டிக்கிடையே பா.ஜனதா கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இதேபோல மேற்கு வங்காளத்தை கைப்பற்ற பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.

கொல்கத்தா:

பீகார் சட்டசபை தேர்தலில் கடும் போட்டிக்கிடையே பா.ஜனதா கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இதேபோல அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் மேற்கு வங்காளத்திலும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜனதா அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த மாநிலத்தில் இதற்கு முன்பு மம்தாவின் திரிணாமூல் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சியும் செல்வாக்கு பெற்றிருந்தன. கம்யூனிஸ்டு கட்சியின் செல்வாக்கை முறியடித்து விட்டு மம்தா ஆட்சியை பிடித்தார்.

இதற்கிடையே அந்த மாநிலத்தில் பா.ஜனதா செல்வாக்கு பெற தொடங்கியது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சி அதிகமான இடங்களை கைப்பற்றியது. மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பா.ஜனதா 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. இரு கட்சிகளுக்கும் இடையே 4 இடங்கள்தான் வித்தியாசம் இருந்தன.

எனவே சட்டசபை தேர்தலில் இன்னும் அதிகமாக உழைத்தால் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்று பா.ஜனதா கருதுகிறது.

இதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார்கள். தற்போது 11 பேர் கொண்ட மேலிடக் குழுவை உருவாக்கி உள்ளனர்.

இந்த குழுவில் கட்சியின் பொது செயலாளர் விஜய் வர்கியா, துஷ்யந்த் கவுதம், செயலாளர்கள் சுனில் தியோதர், வினோத் தவாடே, வினோத் சோங்கர், ஹர்திஸ் திவேதி, அரவிந்த் மேனன், ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா, மாநில தலைவர்கள் அமித் சக்ரவர்த்தி, கிஷோர் வர்மன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது மேற்கு வங்காளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்த மாநிலத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. அவற்றை 5 மண்டலங்களாக பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு மண்டலத்திற்கும் மேலிட தலைவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்களாக கைலாஷ் விஜய் வர்கியா செயல்படுகிறார். அமித் மாளவியா, சுனில் தியோதர், அரவிந்த் மேனன், வினோத் தவாடே ஆகியோர் மாநிலத்தின் நிலைமைகளை ஆய்வு மேற்கொண்டு அதற்கேற்றபடி முடிவுகளை எடுப்பார்கள். இந்த குழுவினர் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோருடன் நேரடி தொடர்பில் இருப்பார்கள். அவர்கள் உத்தரவுக்கு இணங்க செயல்படுவார்கள்.

எல்லா மாநிலத்தையும் போல மேற்கு வங்காளத்திலும் பா.ஜனதாவின் கோஷ்டி பூசல் நிலவுகிறது. குறிப்பாக மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களும், ஏற்கனவே பா.ஜனதாவில் இருப்பவர்களும் தனித் தனி அணிகளாக செயல்படுகிறார்கள். அவர்களை ஒருங்கி ணைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும்? எந்த மாதிரி சூழ்நிலை அங்கு நிலவுகிறது? பிரசாரங்கள் எப்படி மேற்கொள்ள வேண்டும்? போன்றவற்றை ஆய்வு செய்து மேலிடத்திற்கு அனுப்புவார்கள். அதன் அடிப்படையில் பிரசார யுக்திகள் மேற்கொள்ளப்படும்.

Tags:    

Similar News