செய்திகள்
ப சிதம்பரம்

தமிழகத்தில் பா.ஜனதா கால் நகம் கூட பதியவிட மாட்டோம்- ப சிதம்பரம் பேச்சு

Published On 2021-04-04 07:37 GMT   |   Update On 2021-04-04 10:19 GMT
ஓட்டுப்போடுவதற்கு மக்கள் பணத்தை பெற்றுக் கொள்வது அவர்களது மனநிலையை பொருத்தது. ஆனால் இந்திய மக்கள் மீதும், தமிழக மக்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு. மக்கள் ஜனநாயகத்தை எப்போதும் காப்பாற்றுவார்கள்.
காரைக்குடி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் வரவர தமிழக மக்கள் பா.ஜனதாவின் உண்மை மனநிலை, உண்மை முகத்தை அறிந்து கொள்வார்கள்.

பிரதமர் மோடி தமிழகத்தில் இருந்த 2 நாட்களில் மு.க.ஸ்டாலின் மகள், மருமகன் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள். தேர்தல் நேரத்தில் யார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தலாம் என்பது எல்லாம் பா.ஜனதாவுக்கு கை வந்த கலை.

பா.ஜனதா, அ.தி.மு.க. வேட்பாளர்களிடமும், அ.தி.மு.க. அமைச்சர்களிடமும் வருமானவரி சோதனை நடத்த மாட்டார்கள்.



நான் பார்த்த அனைத்து ஆய்வு முடிவுகளிலும் தி.மு.க., காங்கிரஸ் அமைத்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 175 அல்லது 180 இடங்களில் வெற்றிபெறும் என்பதை அறிய முடிகிறது. இது தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை வரவேற்பதை காட்டுகிறது.

பெரும்பான்மை கிடைக்காமல் போனால் பா.ஜனதா குறுக்கு வழியில் எம்.எல்.ஏ.க்களை மிரட்டி ஆட்சி அமைக்க முயற்சிப்பார்கள். ஆனால் அதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள். தமிழகத்தில் அதற்கான வேலையும் இல்லை.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைதர தமிழக மக்கள் தயாராகி விட்டனர். தமிழகத்தில் பா.ஜனதாவின் கால் நகம் கூட பதியவிடமாட்டோம்.

ஓட்டுப்போடுவதற்கு மக்கள் பணத்தை பெற்றுக் கொள்வது அவர்களது மனநிலையை பொருத்தது. ஆனால் இந்திய மக்கள் மீதும், தமிழக மக்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு. மக்கள் ஜனநாயகத்தை எப்போதும் காப்பாற்றுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News