ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன்

திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்கள் பங்கேற்காத ஆடி கார்த்திகை திருவிழா

Published On 2020-08-13 06:13 GMT   |   Update On 2020-08-13 06:13 GMT
கொரோனா ஊரடங்கு காரணமாக வழக்கம்போல ஆடி கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடக்கவில்லை. இதேசமயம் பக்தர்கள் பங்கேற்காத நிலையில் கோவிலுக்குள் திருவிழா நடந்தது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிகார்த்திகை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவிற்காக சன்னதி தெருவில் ஆடி கார்த்திகை மண்டபம் இருப்பது தனிசிறப்பு. ஆடி கார்த்திகை திருநாளில் கோவிலில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு ஆடி கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளுவார்.

அங்கு காலை முதல் இரவு வரை சாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.இதனையடுத்து இரவில் தங்க மயில் வாகனத்தில் அமர்ந்து நகர் உலா வந்து பக்தர்களுக்கு காட்சிதருவார். கொரோனா ஊரடங்கு காரணமாக கார்த்திகை தினமான நேற்று வழக்கம்போல ஆடி கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடக்கவில்லை. ஆடி திருவிழாவை கோவில் நிர்வாகம் ரத்து செய்தது.

இதேசமயம் பக்தர்கள் பங்கேற்காத நிலையில் கோவிலுக்குள் திருவிழா நடந்தது. இதில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து சாமி புறப்பட்டு கோவிலுக்குள் திருவாட்சி மண்டபத்தை வலம் வந்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் சிலர் மற்றும் சிவாச்சாரியர்கள் மட்டும் பங்கேற்றனர்.
Tags:    

Similar News