தேவகோட்டையில் இருசக்கர வாகனங்களில் திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை
தேவகோட்டை:
கொரோனா ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு தளர்வுகளுடன் பிறப்பித்துள்ளது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியே வரும் நபர்கள் இ-பதிவு எடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
இதன் காரணமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபாபதி, ராம்நகரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்தார்.
இந்த சோதனையில் இ-பதிவு இல்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார மருத்துவர் தலைமையில் நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா தொற்று நோயின் தன்மை அறியாமல் வெளியில் சுற்றும் நபர்களுக்கு அறிவுரை வழங்கியும், பரிசோதனையும் நடைபெற்றது. மேலும் அவர்களது வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் நகரில் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் எண்ணிக்கை குறைந்தது.