செய்திகள்
விபத்து

கார்-மினி லாரி மோதல்: அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியரின் மகன் பலி

Published On 2021-04-11 12:05 GMT   |   Update On 2021-04-11 12:05 GMT
வேப்பூர் அருகே கார்-மினி லாரி மோதிய விபத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியரின் மகன் உயிரிழந்தார்.
வேப்பூர்:

நெல்லை மாவட்டம் ஆவாரைகுளம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு(வயது 43). இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை தங்கராசு, தனது மனைவி பாலகுமுதா(33), மகன் குருபிரசாத்(5) ஆகியோருடன் தனக்கு சொந்தமான காரில் நெல்லைக்கு புறப்பட்டார். காரை தங்கராசு ஓட்டினார்.

இவர்களது கார், வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒசூரில் இருந்து இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த மினி லாரியும் தங்கராசு ஓட்டிச்சென்ற காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சிறுவன் குருபிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். தங்கராசு, பாலகுமுதா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த தங்கராசு, பாலகுமுதா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே பலியான சிறுவன் குரு பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News