மேட்டுப்பாளையத்தில் கார் கவிழ்ந்து செல்போன் கடை உரிமையாளர் பலி
மேட்டுப்பாளையம்:
திருப்பூர் காந்தி நகர் குமரன் வீதியை சேர்ந்தவர் சம்சுதீன்(22). இவர் திருப்பூர் எஸ்.ஏ.பி. தியேட்டர் அருகே செல்போன் கடை வைத்துள்ளார். இவரது நண்பர்கள் ஆசிப் (23), அரவிந்தன் (23), கார்த்திகேயன் (23), சூரிய பிரகாஷ் (22).
இவர்களில் ஆசிப்பும் திருப்பூரில் செல்போன் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு இவர்கள் 5 பேரும் சூரிய பிரகாசுக்கு சொந்தமான காரில் மேட்டுப்பாளையம் புறப்பட்டனர்.
காரை கார்த்திகேயன் ஓட்டி வந்தார். இந்த கார் நள்ளிரவு 12.45 மணியளவில் ஊட்டி மேட்டுப்பாளையம் சாலையில் காந்தி சிலை அருகே உள்ள ரேடியோ கடை பகுதியில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்து ரேடியோ கடை படிக்கட்டில் மோதியது. அதன் பின்னரும் கட்டுக்குள் வராமல் ரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதி ல் 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்கள் சத்தம் போட்டனர். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு மேடட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த காயம் அடைந்த ஆசிப் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வரும் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.