செய்திகள்
கைது

அரச்சலூர் அருகே போலி பாஸ்போர்ட்டுடன் இளம்பெண் கைது

Published On 2020-09-21 09:43 GMT   |   Update On 2020-09-21 10:21 GMT
போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

தமிழகம் முழுவதும் கியூ பிரிவு போலீசார் இலங்கை அகதிகள் முகாம், இலங்கை தமிழர் முகாமில் அவ்வபோது சென்று சோதனை செய்வது வழக்கம். இதேப்போல் சந்தேகப்படும் நபர்களை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை, திருச்சியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் கியூ பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது சிலர் போலி பாஸ்போர்ட்டுடன் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கியூ பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ஒரு இளம் பெண் போலி பாஸ்போர்ட்டுடன் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கியூ பிரிவு போலீசார் அரச்சலூர் இலங்கை தமிழர் முகாமில் விசாரணை நடத்தினர். இதில் முகாமில் தங்கியிருந்த பிரதீபா (வயது 36) என்ற இளம்பெண்ணின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர். அப்போது அவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட பிரதீபா 1990-ம் ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக இலங்கை தமிழர் முகாமில் தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் யாராவது போலி பாஸ்போர்ட்டுடன் தங்கி உள்ளார்களா? என்று கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News