செய்திகள்
தேர்தல் பணி வாகனங்களுக்கு உடனடியாக வாடகை வழங்க வேண்டுகோள்
தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் வாடகை வாகனங்கள் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்டன.
திருப்பூர்:
தமிழகத்தில் சுற்றுலா வாகனங்கள், சிறிய சரக்கு வாகனங்கள், கால் டாக்சி, டூரிஸ்ட் டாக்சி, ஆட்டோ என 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. கொரோனா முதல் அலை ஊரடங்கின் போது மோட்டார் தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது 2-வது அலை காலத்தில் அதைவிட கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட மோட்டார் சங்க தலைவர் விஸ்வநாதன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், கடன் பெற்று இயக்கப்படும் வாகனங்களுக்கு மாத தவணைகளை 6 மாதம் ஒத்திவைக்க மத்திய அரசிடமும், ரிசர்வ் வங்கியிடமும் வலியுறுத்த வேண்டும். அதேபோல தமிழக சட்ட மன்ற தேர்தலை ஒட்டி அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் வாடகை வாகனங்கள் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்டன. அந்த வாகனங்களுக்கு இதுவரை வாடகை தரப்படவில்லை.
எனவே அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபட்ட வாகனங்களுக்கு உடனடியாக வாடகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.