செய்திகள்
வாரணாசி பா.ஜ.க. தொண்டர்களுடன் 24ம் தேதி கலந்துரையாடுகிறார் மோடி
பிரதமர் மோடி தனது தொகுதி பாஜக தொண்டர்களுடன் 24ம் தேதி கலந்துரையாட உள்ளார். அப்போது அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி, வரும் 24-ம் தேதி வாரணாசி தொகுதியைச் சேர்ந்த பாஜகவினருடன் கலந்துரையாட உள்ளார். இத்தகவலை மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
“அக்டோபர் 24 ஆம் தேதி எனது பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியைச் சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாட உள்ளேன். இதில் பங்கேற்க வேண்டும் என அனைத்து தொண்டர்களையும் அழைக்கிறேன். உங்களிடம் ஏதேனும் பரிந்துரைகள் அல்லது கேள்விகள் இருந்தால், அவற்றை நமோ ஆப் மூலம் தெரியப்படுத்தலாம்” என மோடி டுவிட் செய்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் பாஜக நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, வாரணாசியில் கட்சி உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி தொகுதி முழுவதும் பாஜகவினர் தீவிர களப்பணியாற்றி உறுப்பினர்களை சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.