ஆன்மிகம்
பேரூர் பட்டீசுவரர் கோவில் தேரோட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா

Published On 2021-03-26 05:53 GMT   |   Update On 2021-03-26 05:53 GMT
பேரூர் பட்டீசுவரர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவில் பட்டாடை, அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.
கோவை அருகே உள்ள பேரூரில் பட்டீசுவரர் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜை, மலர் பல்லக்கு நிகழ்ச்சிநடந்தது. தொடர்ந்து, காலைதோறும் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, யாகசாலை பூஜைகளும் நடந்தன.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து சாமி வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். இதையடுத்து, நேற்று காலை, 8.30 மணிக்கு பட்டாடை, அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.

முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி மாலை, 4.30 மணிக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். சிறுவாணி ரோடு மற்றும் ரத வீதிகள் வழியாக அசைந்து, அசைந்து சென்ற தேர்கள் நிலையை அடைந்தன. இதைத்தொடர்ந்து, நாளை (சனிக்கிழமை) இரவு தெப்பத் திருவிழாவும், வரும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, அதிகாலை நடராஜருக்கு மகா அபிஷேகம் மற்றும் பங்குனி உத்திர தரிசன காட்சியும் நடக்கிறது. இறுதியாக, இரவு 8 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா முடிகிறது.
Tags:    

Similar News