லைஃப்ஸ்டைல்
மாதவிலக்கை தள்ளிப்போடும் மாத்திரை உடல்நலத்தை பாதிக்குமா?

மாதவிலக்கை தள்ளிப்போடும் மாத்திரை உடல்நலத்தை பாதிக்குமா?

Published On 2020-07-06 04:44 GMT   |   Update On 2020-07-06 04:44 GMT
பெண்கள் மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்துவது தவறான செயல் என்றும், அவ்வாறு செய்வதால் பெண்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்கு பிரச்னையை, சில நேரத்தில் செயற்கையாக தள்ளிப் போட நேரிடுகிறது. திருமண விழாக்கள், கோயில் திருவிழா போன்ற  சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அவ்வாறு செய்கின்றனர். அதற்காக மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது தவறான செயல் என்றும், அவ்வாறு செய்வதால் பெண்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். பீரியட்ஸ் மாதந் தோறும் நிகழும் இயற்கையான நிகழ்வு. அதை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஆபத்தானது.

இப்போது மாதவிடாயை தள்ளிப் போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறாமல் மாத்திரைகளின் பெயரை சொல்லி, மெடிக்கல் ஸ்டோரில் பெற்று பயன்படுத்துகின்றனர். இது உடலில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். டாக்டரின் அறிவுரை இல்லாமல் அது போன்ற மாத்திரைகளை கட்டாயம் சாப்பிடக்கூடாது.

மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுப்பவர்கள் முதலில் கர்ப்பபையை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டியது அவசியம். யூட்ரசின் நிலை, அதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் தாக்கி இருக்கலாம்.

அது குறித்து தெரியாமல் மாத்திரை சாப்பிட்டால் அந்த பாதிப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டாக்டரின் அறிவுரை இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடும். வயிற்று புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி வர வாய்ப்புள்ளது.

அடிக்கடி மாத்திரை சாப்பிட்டு மாதவிலக்கை தள்ளி போடும்போது, அதன் மாதந்திர சுழற்சியும் மாறுபடுகிறது. ஒரு முறை தள்ளிப் போனால் அடுத்த முறை சரியாகி விடும் என நினைக்க கூடாது. அவ்வாறு மாத விலக்கு முறை தள்ளிப் போகும்போது, அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்.

அப்போது ரத்தப் போக்கு அதிகரிக்கும். உடலில் உஷ்ணமும் அதிகமாகும். பொதுவாக வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட வைக்கும் மாத்திரைகளை சேர்த்தே தயாரிக்கும் வழக்கம் உள்ளது. அதனால் இஷ்டப்படி மாத்திரைகளை பயன்படுத்துவது உடலை பாதிக்கும். பொதுவாக மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு பெரிய அளவுக்கு பாதிப்பை விளைவிக்க கூடியது இல்லை

என்றாலும் சிறு பாதிப்பு கூட ஏற்படாத அளவுக்கு பெண்கள் உடலை பாதுகாப்பது அவசியம் என்கின்றனர் பெண் மருத்துவர்கள்.
Tags:    

Similar News