செய்திகள்
கோப்புபடம்

பண்ருட்டி அருகே 16 வயது சிறுமிக்கு, சிறுவனுடன் திருமணம்

Published On 2021-06-05 15:02 GMT   |   Update On 2021-06-05 15:02 GMT
பண்ருட்டி அருகே 16 வயது சிறுமிக்கும், சிறுவனுக்கும் நேற்று திருமணம் நடந்தது. குழந்தை திருமணத்தை நடத்தியதால் அவர்களது பெற்றோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கடலூர்:

பண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரும், அண்ணாகிராமம் அடுத்த வடக்குபாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி, சிறுவனுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரது பெற்றோரும் அந்த சிறுவனுக்கும், சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். தற்போது முழுஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பத்திரிகை அச்சடிக்காமல், உறவினர்களுக்கு மட்டும் செல்போனில் அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து நேற்று காலை 6 மணி அளவில் சிறுவனுக்கும், சிறுமிக்கும் அக்கடவல்லி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் எளிய முறையில் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் குழந்தை திருமணம் நடந்தது பற்றி தகவல் அறிந்த கடலூர் சைல்டு லைன் அமைப்பு உறுப்பினர்கள் முகுந்தன், சித்ராதேவி ஆகியோர் பண்ருட்டி போலீசாருடன் சிறுமியின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். பின்னர் 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கும், 21 வயது நிறைவடையாத சிறுவனுக்கும் திருமணம் செய்து வைப்பது சட்டபடி குற்றமாகும் என்று இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் அதிகாரிகள் விளக்கி கூறினர். அதனை தொடர்ந்து சிறுவன்-சிறுமி மற்றும் அவர்களது பெற்றோரை விசாரணைக்காக சைல்டு லைன் அமைப்பினர், கடலூர் சமூக நலத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் சமூக நலத்துறை அலுவலர் அன்பழகி விசாரணை நடத்தினார். இதையடுத்து அவர்களை குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தை திருமணத்தை நடத்தியதற்காக, இருவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க சமூக நலத்துறை அதிகாரிகள், போலீசாருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
Tags:    

Similar News