உள்ளூர் செய்திகள்
நெட்டப்பாக்கத்தில் விஷக் குளவி கொட்டியதில் மாற்றுத்திறனாளி பெண் பரிதாபமாக இறந்து போனார்.
புதுச்சேரி:
கோபிசெட்டி ப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 54). இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெட்டப்பாக்கத்தில் குடிபுகுந்தனர். மாரியம்மாள் மாற்றுத்திறனாளி ஆவார்.ராஜி மரம் ஏறும் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.
கடந்த சில மாதங்களாக ராஜீ தனது மனைவி மற்றும் மகன்களுடன் பண்டக சோழநல்லூரில் பாஸ்கர் ரெட்டியார் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பை குத்தகை எடுத்து அங்கு கூரைவீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாரியம்மாள் இயற்கை உபாதை கழிக்க தென்னந்தோப்பில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு கூடுகட்டியிருந்த குளவிகள் மாரியம்மாளை சரமாரியாக கொட்டியது.
இதில் வலிதாங்காமல் மாரியம்மாள் அலறவே குடும்பத்தினர் அங்கு சென்று குளவிகளை விரட்டி மாரியம்மாளை மீட்டனர்.
பின்னர் அவரை நெட்டப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைகாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் மாரியம்மாளை அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் மாரியம்மாள் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து அவரது கணவர் ராஜீ கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.