செய்திகள்
போலீஸ் வேலை பணி நியமனம் நிறுத்திவைப்பு

போலீஸ் வேலைக்கு தேர்வான 1000 பேர் பணி நியமனம் நிறுத்திவைப்பு

Published On 2020-02-09 07:55 GMT   |   Update On 2020-02-09 07:55 GMT
போலீஸ் தேர்வில் ஏற்பட்ட மோசடி தொடர்பாக ஆயிரம் பேருக்கு பணி ஆணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி. பணியாளர் தேர்வில் பெரிய அளவில் மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பலர் கைதாகி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த போலீஸ் பணியாளர் தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து பலர் வேலையில் சேர முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக போலீஸ் துறை, தீயணைப்பு துறை, ஜெயில் துறை ஆகியவற்றுக்கான காவலர்களை தேர்வு செய்ய தனியாக சீருடை பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது.

இந்த 3 துறைகளிலும் போலீஸ் கான்ஸ்டபிள், தீயணைப்பு வீரர்கள், ஜெயில் வார்டன்கள் பிரிவில் 8 ஆயிரத்து 888 பணியிடங்கள் காலியாக இருந்தன.

இதற்கான ஆட்களை தேர்வு செய்வதற்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி எழுத்து தேர்வு நடந்தது. 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு 15 மையங்களில் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 47 ஆயிரம் பேர் வெற்றி பெற்றார்கள். அதன்பிறகு இறுதியாக 8 ஆயிரத்து 800 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த 3 பணிகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கென 10 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி அவர்கள் முக்கிய விளையாட்டுகளில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

ஆனால், ஏராளமானோர் தகுதியற்ற சான்றிதழ்களை வழங்கி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் பெற்று இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் பல்வேறு விளையாட்டு சங்கங்கள் மூலமாகவும், அமைப்புகள் மூலமாகவும் சான்றிதழ்களை பெற்று பலர் இந்த இடஒதுக்கீட்டை பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தனர்.

விளையாட்டு இடஒதுக்கீட்டில் தேர்வு பெற்று இருந்த அனைவருடைய விளையாட்டு சான்றிதழ்களும் சரிபார்ப்பு பணிக்காக தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் 1000 சான்றிதழ்களுக்கு மேல் தகுதியற்றது என்று கூறி உள்ளனர்.

அதாவது விளையாட்டு இடஒதுக்கீட்டில் இடம் கேட்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் மற்ற மாநில அணிகளுடன் விளையாடி இருக்க வேண்டும்.

ஆனால், தமிழக விளையாட்டு ஆணையம் அங்கீகரித்த போட்டிகளில் அல்லாமல் வேறு அமைப்புகள் நடத்திய போட்டிகளில் பங்கேற்றவர்களும், சங்கம் மற்றும் அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ் பெற்று விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

அது மட்டும் அல்லாமல் ஏராளமானோர் போலியாகவும் சங்கம் மற்றும் அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ் பெற்றதும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு ஆயிரம் பேருக்கு மேல் தகுதியற்ற மற்றும் போலி சான்றிதழ்களை வழங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படாமல் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 200 பேர் கட்-ஆப் மார்க் அடிப்படையில் மற்ற பிரிவிலேயே வேலைக்கு சேரும் தகுதி பெற்றிருக்கிறார்கள்.

அவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. மற்ற 800 பேருடைய சான்றிதழ் தகுதியற்றது என்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு வேலை மறுக்கப்படும்.

இது சம்பந்தமாக போலீஸ் தலைமையக சிறப்பு குழு ஒன்று சான்றிதழ்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் தவறான சான்றிதழ்களை கொடுத்து இருந்தாலோ, போலி சான்றிதழ் வழங்கி இருந்தாலோ அது மோசடி குற்றமாக கருதப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.

Tags:    

Similar News