செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்

டிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு

Published On 2019-09-16 19:53 GMT   |   Update On 2019-09-16 19:53 GMT
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வடகொரியாவுக்கு வரும்படி வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பியாங்யாங்:

வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா-தென்கொரியா ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் 4-வது முறையாக சந்தித்து பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்த ஆண்டு இறுதிக்குள் ஏதேனும் ஒரு தருணத்தில் கிம் ஜாங் அன்னை சந்திப்பேன்” என கூறினார். இந்த நிலையில், டிரம்பை வடகொரியாவுக்கு வரும்படி கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கடிதம் ஒன்றை கடந்த மாத இறுதியில் கிம் ஜாங் அன், டிரம்புக்கு அனுப்பியதாக தென்கொரியா ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த செய்தியில், “டிரம்புக்கு, கிம் ஜாங் அன் அனுப்பிய கடிதத்தில், அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக தலைநகர் பியாங்யாங்கில் டிரம்பை சந்தித்து பேச தான் விரும்புவதாக கிம் ஜாங் அன் குறிப்பிட்டு உள்ளார்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும் இந்த கடிதம் குறித்து வடகொரியா மற்றும் அமெரிக்கா தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. 
Tags:    

Similar News