செய்திகள்
திமுக

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’- திமுக மூத்த தலைவர்கள் 11 நாளில் 60 ஆயிரம் மக்களை சந்தித்தனர்

Published On 2020-12-05 09:30 GMT   |   Update On 2020-12-05 09:30 GMT
கடந்த 11 நாட்களில், ஏழு கழக முன்னணியினர் 2,099 கி.மீ., பயணம் மேற்கொண்டு, 15 கழக மாவட்டங்களிலுள்ள 41 சட்டமன்றத் தொகுதிகளில் 232 நிகழ்ச்சிகளில் பங்கேற்று 59,140 மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துள்ளனர்.
சென்னை:

தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் செய்தியைத் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரசாரப் பயணத்தை, கடந்த நவம்பர் 20-ந்தேதி தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிவித்தார்.

அதன்படி, தி.மு.க.வை சேர்ந்த 15 கழக முன்னணியினர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் தூதுவர்களாக 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 75 நாட்கள், 15 ஆயிரம் கி.மீ., பயணம் செய்து 1,500க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை நேரில் சந்தித்து உரையாடுவார்கள்.

இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த நவம்பர் 20-ந் தேதி கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார்.

அடுத்ததாக, மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியில் இருந்து தனது பரப்புரையைத் தொடங்கி ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து வருகிறார்.

அதேபோல், கழக கொள்கைப்பரப்புச் செயலாளர்கள் சபாபதி மோகன் காஞ்சிபுரம் மாவட்டத்திலும், திண்டுக்கல் ஐ.லியோனி திருநெல்வேலி மாவட்டத்திலும் தங்களது பிரசாரத்தை தொடங்கினர்.

சபாபதி மோகன் முதல் நாளில் 74 கி.மீ பயணித்து விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்ததோடு, பொது மக்களுடன் சமபந்தி விருந்திலும் பங்கேற்றார். திண்டுக்கல் ஐ.லியோனி 90 கி.மீ., பயணித்து ஆயிரக்கணக்கான மக்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசி வருகிறார்.

துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியிலும், அந்தியூர் செல்வராஜ் அவிநாசி தொகுதியிலும் தங்களது பிரசாரத்தை தொடங்கினர். ஐ.பெரியசாமி 35 கி.மீ., பயணம் மேற்கொண்டு விவசாயிகளையும் மக்களையும் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அந்தியூர் செல்வராஜ் 75 கி.மீ., பயணித்து, அருந்ததியர் சமூக மக்களைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பின்னர், சேவூர் பகுதியில் உள்ள மக்களிடம் அவர் பேசியபோது, அப்பகுதியில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பூங்காவிற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தலை எதிர்க்கும் தங்களது கோரிக்கையை அவரிடம் எடுத்து வைத்தனர்.

தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் சைதாப்பேட்டைப் பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கி, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அப்பகுதிவாசிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

இதுவரை கடந்த 11 நாட்களில், ஏழு கழக முன்னணியினர் 2,099 கி.மீ., பயணம் மேற்கொண்டு, 15 கழக மாவட்டங்களிலுள்ள 41 சட்டமன்றத் தொகுதிகளில் 232 நிகழ்ச்சிகளில் பங்கேற்று 59,140 மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News