உள்ளூர் செய்திகள்
ரூ.2 கோடி மோசடி வழக்கில் தலைமறைவான 8 பேர் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம்
ரூ.2 கோடி மோசடி வழக்கில் தலைமறைவான 8 பேர் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.
ஈரோடு:
ரூ.2 கோடி மோசடி வழக்கில் தலைமறைவான 8 பேர் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் 800 பேர் உறுப்பினராக உள்ளனர்.
இந்நிலையில் மார்க்கெட் வியாபாரிகளிடம் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி 350 பேரிடம் தலா ரூ.70 ஆயிரம் வீதம் ரூ.2 கோடி வரை மார்க்கெட் சங்க நிர்வாகிகள் சிலர் வசூலித்து உள்ளனர்.
பின்னர் நசியனூர் பகுதியில் 20 ஏக்கர் நிலத்தை வாங்கி அதனை வியாபாரிகளுக்கு கிரையம் செய்யாமல், சங்க நிர்வாகிகள் அவர்களது பெயரிலும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பத்திர பதிவு செய்துள்ளனர்.
வியாபாரிகளிடம் வசூலித்த பணத்தை திருப்பித் தராமல் ரூ.2 கோடி மோசடி செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும், அ.தி.மு.க. பிரமுகர்களுமான 5 பேர் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் என மொத்தம் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி சங்க பொருளாளரும், அ.தி.மு.க. வார்டு செயலாளருமான வைரவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 3-ந் தேதி அ.தி.மு.க. பிரமுகரின் மகனான வினோத்குமார் (28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த சங்க துணைச் செயலாளரும், அ.தி.மு.க. உறுப்பினருமான கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் வீதியைச்சேர்ந்த ஆறுமுகம் (48) என்பவரை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் அ.தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 8 பேரை போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து வலைவீசி தேடிவருகின்றனர்.