செய்திகள்
ராகுல் காந்தி

குஜராத் கோர்ட்டில் ஆஜராக உள்ளார் ராகுல் காந்தி - காங்கிரஸ்

Published On 2019-10-08 16:16 GMT   |   Update On 2019-10-08 16:16 GMT
குஜராத் மாநிலத்தின் சூரத் நகர் கோர்ட்டில் அக்டோபர் 10-ம் தேதி அன்று ராகுல் காந்தி ஆஜராக உள்ளார் என அம்மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அகமதாபாத்:

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், இந்த நாட்டின் காவலாளி என்று தன்னை கூறும் மோடி 100 சதவீதம் திருடன் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். நிரவ் மோடி ஆகட்டும், லலித் மோடி ஆகட்டும், நரேந்திர மோடி ஆகட்டும், எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
 
இதற்கிடையே, சமஸ்த் குஜராத்தி மோத் மோடி சமாஜம் என்ற அமைப்பின் சார்பில் சூரத் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணைக்காக அக்டோபர் 10-ம் தேதி ராகுல் காந்தி சூரத் கோர்ட்டில் ஆஜராக உள்ளார் என அம்மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா கூறுகையில், விமான நிலையம் வந்து இறங்கியது முதல் கோர்ட் வருவது வரை  ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News