செய்திகள்
கோப்புபடம்

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: குழந்தைகளுடன் பெண்கள் தீக்குளிக்க முயற்சி

Published On 2021-02-20 13:51 GMT   |   Update On 2021-02-20 13:51 GMT
செஞ்சியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளுடன் பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செஞ்சி:

செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட பூவாத்தம்மன் தெருவில் உள்ள ஒரு வீட்டின் மேல்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்தது. இதையறிந்த தெரு மக்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படும் என கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அந்த பணி நடைபெற வில்லை. இந்த நிலையில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு தேவையான உதிரிபாகங்கள் நேற்று பூவாத்தம்மன் தெருவுக்கு வந்து இறங்கியது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பெண்கள் பெட்ரோல் கேன்களுடன் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு செஞ்சி தாலுகா அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பியபடி திடீரென குழந்தைகள் மீதும் தங்கள் மீதும், பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை சற்றும் எதிர்பாராத தாலுகா அலுவலக ஊழியர்கள் ஓடி வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெண்களிடம் இருந்த பெட்ரோல் கேன்களை பிடுங்கினர்.

இதையடுத்து ஊழியர்கள் அந்த பெண்களை தாசில்தார் ராஜனிடம் அழைத்துச் சென்றனர். அப்போது தாசில்தார் ராஜன் அந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தததோடு, இந்த பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து பூவாத்தம்மன் தெருவில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளுடன் பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News