செய்திகள்
நடிகை கங்கனா ரனாவத் - அரியானா மந்திரி அனில் விஜ்

நடிகை கங்கனா ரனாவத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் - அரியானா மந்திரி பேச்சு

Published On 2020-09-05 14:53 GMT   |   Update On 2020-09-05 14:53 GMT
நடிகை கங்கனா ரனாவத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி, சுதந்திரமுடன் உண்மைகளை பேச அனுமதிக்க வேண்டும் என அரியானா மந்திரி பேசியுள்ளார்.
சண்டிகர்:

நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14ந்தேதி தற்கொலை செய்து கொண்டார்.  மன உளைச்சலால் தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார். மேலும் பாலிவுட்டில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகம் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

தொடர்ந்து, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசினார்.  இதற்கு, மும்பை அல்லது மராட்டியத்தை யாராவது இழிவுபடுத்தவும், அவமதிக்கவும் முயன்றால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் பதிலடி கொடுத்து உள்ளார்.  வரும் 9ந்தேதி கங்கனா மும்பைக்கு விமானத்தில் வந்திறங்கினால் சிவசேனா பெண் உறுப்பினர்கள் கன்னத்தில் அறைந்திடுவார்கள் என்றும் கூறினார்.

அக்கட்சியின் எம்.எல்.ஏ. பிரதாப் சர்னாயக், கங்கனா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறினார்.  அவரது இந்த பதிவை தொடர்ந்து சர்னாயக் கைது செய்யப்பட வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. ஆளும் அரியானா மாநில உள்துறை மந்திரியாக இருக்கும் அனில் விஜ் கூறும்பொழுது, நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில், சுதந்திரமுடன் உண்மைகளை பேசுவதற்கு நடிகை கங்கனா ரனாவத் அனுமதிக்கப்பட வேண்டும் என கூறினார்.  மராட்டிய முன்னாள் முதல் மந்திரி பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் பேச்சு சுதந்திரம் பற்றி பேசி வரும் நிலையில் அதனை ஊக்குவிக்கும் வகையில் விஜ் பேசியுள்ளார்.  நடிகை கங்கனா ரனாவத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அனில் விஜ் கூறியுள்ளார்.

Tags:    

Similar News