வடவள்ளியில் தொடர் கொள்ளையில் முதியவர் கைது
கோவை:
கோவை கல்வீராம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி (வயது 25). ஆன்லைன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று வீட்டில் தனது செல்போனை ஜன்னல் ஓரம் வைத்து விட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தார்.
அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் ஜன்னல் வழியாக கையை விட்டு செல்போனை எடுத்து அங்கிருந்து தப்பி சென்றார்.இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீஹரி இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் வடவள்ளியில் இதுபோன்று தொடர் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவம் நடந்து வந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி சீனிவாசலு மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மர்ம நபரை அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்தும், வாகன சோதனை நடத்தியும் தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது கல்வீரம் பாளையம் பகுதியில் நின்றிருந்த முதியவர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அந்த பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 61) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் பாஸ்கருக்கு கோவையை தவிர திருச்சி, மதுரை, திண்டுக்கல், சென்னை ஆகிய பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளிலும் தொடர்புடையது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருடிய பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.