செய்திகள்

சாமி சிலை வழக்கு- கூடுதல் ஆணையர் திருமகளை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை

Published On 2018-08-09 09:40 GMT   |   Update On 2018-08-09 09:40 GMT
சாமி கடத்தல் வழக்கில் கூடுதல் ஆணையர் திருமகளை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #IdolSmuggling #HighCourt
சென்னை:

தமிழகத்தில் பழமையான கோவில்களில் இருந்து பல சாமி சிலைகள் கடத்தப்பட்டன.

இதுகுறித்து ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரித்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா உட்பட பலரை இந்த தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதாக தமிழக அரசு கடந்த 1-ந்தேதி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன். ஆதிகேசவலு ஆகியோர், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வரும் திருமகள் மீதும், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அவரை விரைவில் கைது செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து கூடுதல் ஆணையர் திருமகள், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், பதில் அளிக்கும் படி போலீசாருக்கு உத்தரவிட்டனர். முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை திருமகளை கைது செய்யவும் தடை விதித்தனர். #IdolSmuggling #HighCourt
Tags:    

Similar News