செய்திகள்
கோப்புபடம்.

நன்னடத்தை பிணையை மீறிய குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

Published On 2021-10-15 11:29 GMT   |   Update On 2021-10-15 11:29 GMT
கடந்த சில நாட்களுக்கு முன் முருகானந்தம், அதே பகுதியை சேர்ந்த, மணிகண்டன் என்பவரை கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக அரிவாளால் வெட்டி காயப்படுத்தினார்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளி ஜல்லிபட்டி தினைக்குளத்தை சேர்ந்தவர் முருகானந்தன் (வயது 30). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உடுமலை, குமரலிங்கம் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. தமிழக அரசு சமீபத்தில் பழைய குற்றவாளிகள், ரவுடிகளை கைது செய்யவும், குற்றவியல் நடைமுறைப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியது. 

அதன் அடிப்படையில் தளி இன்ஸ்பெக்டர், முருகானந்தத்தை கைது செய்து உடுமலை வருவாய் கோட்டாட்சியர் முன் ஆஜர்படுத்தினார். 

விசாரணையை தொடந்து குற்றவாளி தொடர் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தி நிபந்தனையுடன் கூடிய நன்னடத்தை பிணை வழங்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் முருகானந்தம், அதே பகுதியை சேர்ந்த, மணிகண்டன் (50) என்பவரை கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக அரிவாளால் வெட்டி காயப்படுத்தினார். 

தளி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ததுடன் நன்னடத்தை பிணையை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் பிணை காலமான 2 ஆண்டு காலமும் முருகானந்தத்தை சிறையில் அடைக்க கோட்டாட்சியர் கீதா உத்தரவிட்டார். 

இதையடுத்து தளி போலீசார் முருகானந்தத்தை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News