செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்வு பற்றி பேச திமுகவுக்கும், காங்கிரசுக்கும் தகுதி கிடையாது- அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-09-15 02:02 GMT   |   Update On 2020-09-15 02:02 GMT
‘நீட்’ தேர்வு பற்றி பேச தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தகுதி கிடையாது என அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை:

தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு தாய் சேய் மருத்துவமனையில், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமின்றி அனைத்து நோயாளிகளுக்கும் சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் குடற்புழு நீக்க முகாம் தொடங்கபட்டுள்ளது. 2 வாரம் நடைபெறும் இந்த முகாமில் 54 ஆயிரத்து 439 சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். இந்த முகாமில் ஒன்று முதல் 19 வயது வரை உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

‘நீட்’ தேர்வு பற்றி பேச தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தார்மீக உரிமையோ, தகுதியோ இல்லை. ‘நீட்’ எதிர்ப்பு கொள்கையில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது. ‘நீட்’ என்ற வார்த்தை கடந்த 2010-ம் ஆண்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தான் விதைக்கப்பட்டது. இப்போது அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படியே செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் மக்களையும், மாணவர்களையும் குழப்பி திசை திருப்புவதற்காக, தி.மு.க.வும், எதிர்க்கட்சிகளும் ஆட்சியில் இருந்தபோது தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கின்ற செயலை செய்கின்றனர்.

முககவசம் அணிய வேண்டும் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. இதுவரை கொரோனா பாதித்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் குணமடைந்துள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் குருநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News