செய்திகள்
கற்பழிப்பு குற்றவாளி

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - தண்டவாளத்தில் பிணமாக கிடந்த குற்றவாளி

Published On 2021-09-16 10:41 GMT   |   Update On 2021-09-16 10:41 GMT
ஐதராபாத் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி தண்டவாளத்தில் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சிங்கி ரேனி காலனி பகுதியில் வசித்து வந்த 6 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டாள். அவளது உடல் ராஜூ என்ற வாலிபர் வசிக்கும் பக்கத்து வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

அவர் சிறுமியை கற்பழித்து கொன்று விட்டு தப்பிச் சென்று இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜூவை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

அவரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று ஐதராபாத் காவல் துறையினர் அறிவித்தனர்.

இதற்கிடையே தெலுங்கானா மந்திரி மல்லா ரெட்டி கூறும்போது, ‘‘கற்பழிப்பு குற்றவாளியை நாங்கள் பிடிப்போம். அவர் சிக்கிய பிறகு என்கவுண்டர் செய்யப்படுவார்’’ என்று கூறியிருந்தார்.

ராஜூவை போலீசார் ஐதராபாத் மற்றும் நல்கொண்டா, ரங்காரெட்டி ஆகிய மாவட்டங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜூ ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

அது ராஜூதான் என்று தெலுங்கானா போலீசார் உறுதிபடுத்தினர். மேலும் அவரது உடல் படங்களை டுவிட்டரிலும் வெளியிட்டுள்ளனர்.

போலீசுக்கு பயந்து ராஜூ தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தப்பி ஓடிய போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்பது தெரியவில்லை.

Tags:    

Similar News